புரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 31 ஜூலை, 2014

புரதங்களும் மனித உணவும்


மாவுச்சத்துக்கு அடுத்தபடியாக மனிதனுக்கு வேண்டியது புரதச்சத்தாகும். அடுத்தபடியாக என்று வரிசைக் கிரமத்திற்காக சொன்னேனே தவிர, முக்கியத்துவத்தில் புரதம்தான் முதலாவதாக இருக்கின்றது.

புரதம் என்பது மாவுச்சத்து கூட நைட்ரஜன் என்ற தனிமமும் சேர்ந்த ஒரு கூட்டுப் பொருளாகும். புரிந்து கொள்ள எளிமைக்காக இப்படி சொன்னேனே தவிர புரதம் என்பது ஒரு தனித்தன்மை கொண்ட அங்ககப் பொருளாகும்.

ஆகாயத்திலுள்ள காற்றில் ஏறக்குறைய 80 சதம் நைட்ரஜன் வாயுதான். ஏன் இதை நாம் அப்படியே நம் உடல் தேவைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கேட்கலாம். நல்ல கேள்விதான். ஆனால் இயற்கையின் மர்மங்களை யார் அறிவார்?

புரதம் என்பது 26 வகையான அமினோஅமிலங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் 10 அமினோ அமிலங்கள் அவசியமானவை என்று வகைப் படுத்தியுள்ளார்கள். காரணம், இவைகளை மனித உடம்பில் தயாரிக்க முடியாது. மற்றவைகளை சமாளித்துக் கொள்ளலாம்.

மனித உடம்பில் உள்ள அனைத்து திசுக்களும் புரதத்தையே ஆதாரமாகக் கொண்டவை. தவிர அனைத்து ஹார்மோன்களும், என்சைம்களும் வைட்டமின்களும் புரதத்தையே ஆதாரமாகக் கொண்டவை. இன்னொரு முக்கியமான விஷயம். பலர் அறிந்திருந்தாலும் நினைவில் வைத்துக்கொள்ளாத ஒரு சமாச்சாரம் என்னவென்றால், நம் உடம்பில் உள்ள பெரும்பாலான திசுக்களின் ஆயுட்காலம் சராசரியாக15 நாட்கள்தான். அதன் பிறகு அந்த திசுக்களை அழித்து விட்டு அவைகளின் இடத்தில் புது திசுக்களை நம் உடம்பு உண்டுபண்ணிக்கொள்கிறது.

இந்த ரிப்பேர் வேலை நம் ஆயுட்காலம் முழுவதும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. எலும்புகளும் மூளையும் இதற்கு விதிவிலக்கு. எலும்பு திசுக்களின் ஆயுட்காலம் 25-30 வருடங்கள். மூளை திசுக்கள் எப்போதும் அழிவதில்லை. (அவ்வப்போது மூளையும் தன்னைப் புதிப்பித்துக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நான் எப்போது உன்னிடம் கடன் வாங்கினேன் என்று கூசாமல் சொல்லலாம்).

இந்த திசுக்களை புதிப்பிக்கும் வேலைக்கு புரதம் கண்டிப்பாகத் தேவை. புரதம் பற்றாக்குறை இருந்தால் இந்த வேலை நடக்காது. அப்போது மனிதனின் அவயவங்கள் தங்கள் வேலைகளைச் செய்வது நின்று போய்விடும். அப்புறம் என்ன நடக்கும் என்பது நீங்கள் அறிந்ததுதான்.

உங்கள் மனதில் தோன்றும் ஒரு கேள்விக்கு இங்கேயே பதில் கூறி விடுகிறேன். பழைய திசுக்களை அழிக்கும்போது அதில் இருக்கும் புரதத்தை வைத்து ஏன் மறு சுழற்சி முறையில் புது திசுக்களை உண்டு பண்ணக்கூடாது? நல்ல கேள்விதான். ஆனால் சாதாரண மனிதர்களால் அப்படி மறுசுழற்சி செய்ய முடியாது. பழங்கால சித்தர்கள் இந்த வித்தையைக் கற்றிருக்கலாம். அதனால்தான் அவர்கள் காற்றையே உட்கொண்டு ஜீவித்திருந்தார்கள் என்று புத்தகங்களில் படிக்கிறோம்.

பழைய திசுக்களை அழிக்கும்போது புரதச்சத்து பெரும்பாலும் அழிக்கப்பட்டு, அதிலுள்ள நைட்ரஜன் தனிமம் யூரியாவாக மாறுகின்றது. இந்த யூரியாதான் சிறுநீரகங்கள் மூலமாகப் பிரிக்கப்பட்டு சிறுநீராக மாறி வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு யூரியா வெளியேற்றப்பட-வில்லையானால் இரத்தத்தில் யூரியா அதிகம் சேர்ந்து பல வியாதிகளைத் தோற்றுவிக்கும்.

நமக்கு புரதம் பல வகைகளில் கிடைக்கிறது. நாம் உணவில் பயன்படுத்தும் பருப்பு வகைகள்தாம் முக்கியமாக நமக்கு புரதத்தைத் தருகின்றன. அரிசி. கோதுமை போன்ற தானியங்களிலும் புரதம் இருந்தாலும் அவை மிகக் குறைவாக இருப்பதால் நம் உடலின் தேவைக்குப் போதாது. ஆகவேதான் புரதம் அதிகமுள்ள பருப்பு வகைகளை உபயோகிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

பருப்புகளை மட்டும் நம்பியிருக்கும் சாகபட்சிணிக்காரர்களுக்கு ஒரு சங்கடம் இருக்கிறது. நமக்கு வேண்டிய அனைத்து அமினோ அமிலங்களும் கொண்ட பருப்பு வகைகள் இல்லை. ஆகையால் பல வகையான பருப்புகளை நம் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இக்குறையை ஓரளவு சரிக்கட்டலாம். ஆனாலும் அந்த முறை முழுமையாக நம் புரதத் தேவையை ஈடு கட்டாது.

மனிதனுக்கு வேண்டிய அனைத்து அமினோ அமிலங்களும் கொண்ட புரதம் மாமிச உணவில்தான் இருக்கிறது. பால், முட்டை, மீன், கோழி, ஆடு, மாடு, இன்ன பிற. நான் சாக பட்சிணி என்று சொல்லிக்கொள்ளும் பெரும்பாலான மனிதர்கள் பாலை மாமிச உணவு என்று கருதுவதில்லை. அதனால்தான் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்.

இன்னும் சிலர் முட்டையை வெஜிடபிள் கணக்கில் சேர்த்துக்கொள்கிறார்கள். ஏனென்றால் வெஜிடபிள் முட்டை என்று இப்பொழுது குஞ்சு பொரிக்காத முட்டைகள் அதிகம் உற்பத்தியாகின்றன. மங்களூரிலும் வங்காளத்திலும் பிராமணர்கள் கூட மீன் சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த விவகாரம் அவரவர்கள் நம்பிக்கை சம்பந்தப்பட்டது.

ஆனால் மனிதன் தான் சாப்பிடும் உணவில் போதுமான புரதச்சத்து இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

செவ்வாய், 18 டிசம்பர், 2012

புரதச்சத்தின் அவசியமும் மருந்துக் கம்பெனிகளின் ஏமாற்று வித்தைகளும்

மனிதன் உயிர் வாழ உணவு, நீர், காற்று ஆகிய மூன்றும் அத்தியாவசியத் தேவைகள் என்பதை அனைவரும் அறிவோம். இந்த மூன்றில் நீரும் காற்றும் இயற்கை அன்னை நமக்கு இலவசமாகக் கொடுக்கிறது என்பதையும் அறிவோம். இலவசமாகக் கிடைக்கும் எதையும் மனித இனம் எப்படி பயன்படுத்தும் என்பதையும் நாம் நன்கு அறிவோம்.

காசு கொடுத்து வாங்கும் உணவில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்பதை முன்னொரு பதிவில் எழுதியிருந்தேன். இருந்தாலும் நினைவுக்காக இன்னொரு முறை கூறுவதில் தவறு இல்லை.

1. கார்போஹைட்ரேட்ஸ்
2. புரதச்சத்து
3. கொழுப்புச் சத்து
4. வைட்டமின்ஸ் மற்றும் ஹார்மோன்கள்
5. கனிமச்சத்துகள்.

இதில் புரதச்சத்து சம்பந்தமாக சில உண்மைகளை ஆராய்வோம். புரதச் சத்து என்பது நைட்ரஜன் சேர்ந்த ஒரு கூட்டுப்பொருள்.

மனித உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லுக்குள்ளும் "ந்யூக்ளியஸ்" என்றொரு பாகம் இருக்கிறது. இது முற்றிலும் புரதச்சத்தினால் ஆனது. மனிதனின் செல்களின் ஆயுள் காலம் 15 முதல் 25 நாட்கள் மட்டுமே. ஏறக்குறைய 25 நாட்களுக்கு ஒரு முறை நாம் புது மனிதனாக மாறுகிறோம். ஆனால் எப்படி அதே பழைய விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன என்பதுதான் நம்மைப் படைத்தவன் நிகழ்த்தும் அதிசயம்.

இப்படி இந்தப் பழைய செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும்போது ஏற்படும் மாற்றங்களைப் பார்ப்போம். பழைய செல்கள் அழியும்போது அதன்  "ந்யூக்ளியஸ்" ல் உள்ள புரதங்கள் அழிந்து யூரியாவாக மாறுகிறது. இது ரத்தத்தில் கலந்து கிட்னிக்குப் போகும்போது பிரிக்கப்பட்டு சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. விவசாயத்தில் பயிர் வளர்ச்சிக்காக "யூரியா" என்ற உரம் போடுவது உங்களுக்குத் தெரியும். பயிர்களுக்குத் தேவையான நைட்ரஜனை இந்த யூரியாதான் கொடுக்கிறது.

அழிந்து போன செல்களுக்குப் பதிலாக புதிய செல்கள் உருவாகும்போது அவைகளுக்கு  புரதச்சத்து தேவைப்படுகிறது. மனித உடம்பின் ஒரு கிலோ எடைக்கு அரை கிராம் புரதம் தினந்தோறும் தேவை. அறுபது (60) கிலோ எடையுள்ள ஒரு மனிதனுக்கு தினந்தோறும் 30 கிராம் புரதம் தேவை.

நாம் சாப்பிடும் முக்கிய உணவுகளில் இருக்கும் புரதச்சத்தின் அளவுகள் வருமாறு.

பருப்பு - 40 %
பால்     -  6%
அரிசி   -   3%
மட்டன், மீன் - 30%
முட்டை -  30%
காய்கறிகள் - 1 அல்லது 2%

நாம் சாப்பிடும் இந்த உணவுகளில் இருக்கும் புரதச்சத்து முழுவதும் அப்படியே உடலுக்குக் கிடைப்பதில்லை. 50 லிருந்து 60 சதம் மட்டுமே உடலுக்கு கிடைக்கிறது. ஆகவே ஒரு மனிதன் கிட்டத்தட்ட 100 கிராம் புரதம் ஒரு நாளில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

சில மருந்துக் கம்பெனிகளின் ஏமாற்று வித்தைகள்:

இவைகளை ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்காகத்தான் இந்தப் பதிவு.

சில கடல் தாவரங்களில் புரதச்சத்து 50 % வரை இருக்கிறது. தவிர இந்தப் புரதச்சத்துகள் 50 -60 % வரை உடல் எடுத்துக்கொள்கிறது. இந்த வகையில் இவை மிகவும் நல்ல உணவுதான். சந்தேகமே இல்லை. ஆனால் மனிதனுக்கு தினமும் வேண்டிய 100 கிராம் புரதச்சத்தை இத்தகைய உணவுகளின் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாமே என்று தோன்றினால் அது தவறு. முதல் காரணம் அவைகளின் கிடைக்கும் அளவு. எல்லோருக்கும் வேண்டிய அளவு கடல் தாவரங்களை சந்தைப்படுத்த முடியாது. கடலில் அவ்வளவு தாவரங்கள் இல்லை.

இரண்டாவது மனிதன் ஒரே வகையான உணவை தினந்தோறும் சாப்பிடமுடியாது. ருசியைத் தவிர ஒரே வகை உணவைச் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் கெடும்.

மூன்றாவது அவைகளின் விலை. அதிகமாக கிடைக்காததால் அவற்றின் விலை அதிகமாக இருக்கும். சாதாரண ஜனங்களால் வாங்கி உபயோகப்படுத்த முடியாது.

"ஸ்பிருலினா" என்பது இத்தகைய தாவரங்களில் ஒன்று. இயற்கையாக இவை கடலில் வளர்கின்றன. ஆனால் செயற்கையாக இவைகளை உள்நாட்டிலும் வளர்க்க முடியும். இவைகளில் உள்ள புரதம் மிகவும் நல்ல வகையைச் சேர்ந்தது. ஆகவே சில பரிசோதன்களில் மனித உடலுக்கு இது நல்லது என்று ஆராய்ச்சியில் கண்டு பிடித்தார்கள்.

இந்த முடிவை சில மருந்துக் கம்பெனிகள் ஆதாரமாக வைத்துக்கொண்டு "ஸ்பிருலினா" மாத்திரைகள் மற்றும் கேப்சூல்கள் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தார்கள். டாக்டர்களும் இந்த மாத்திரைகளைப் பரிந்துரைத்தார்கள். இதில் எல்லாம் ஒன்றும் ஏமாற்று வித்தைகள் இல்லை.

ஆனால் இந்த மாத்திரைகளை என்ன விலைக்கு விற்றார்கள், அதில் எவ்வளவு கொள்ளையடித்தார்கள் என்பதுதான் நாம் அறிந்து கொள்ளவேண்டிய செய்தி.

ஒரு "ஸ்பிருலினா" கேப்ஸ்யூலில்" ஐந்நூறு (500) மில்லி கிராம், அதாவது அரை கிராம் ஸ்பிருலினா எக்ஸ்ட்ராக்ட் இருக்கிறது. அதில் ஒரு 300 மில்லிகிராம் புரதம் இருக்கும். தினம் 3 அல்லது 4 கேப்ஸ்யூல் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒரு மனிதனின் அன்றாட புரதத் தேவையில் ஏறக்குறைய நூற்றில் ஒரு பங்கு ஆகும். இதற்கு செலவு, ஒரு கேப்ஸ்யூல் 5 ரூபாய் வீதம் 15 அல்லது 20 ரூபாய் ஆகும்.

மக்களே, யோசித்துப் பாருங்கள்.

சுமார் 5 கிராம் (இன்றைய விலையில் 50 பைசா)  துவரம் பருப்பிலிருந்து கிடைக்கக் கூடிய புரதச்சத்திற்கு 20 ரூபாய் விலை வைத்து மருந்துக் கம்பெனிகள் விற்கின்றன. நம் உணவில் கிடைக்காத. நோய் தீர்க்கும் மருந்துகளுக்கு நாம் அதிக விலை கொடுக்கிறோம். அதிலாவது ஓரளவு நியாயம் இருக்கிறது.

நம் அன்றாட உணவில் கிடைக்கக் கூடிய புரதச்சத்திற்கு இவ்வளவு விலை வைத்து விற்கிறார்களே, இதில் உள்ள உள்வயணம் தெரியாமல் நம் மக்களும் வாங்கிச் சாப்பிடுகிறார்களே, இந்தக் கொள்ளைக்கு சில டாக்டர்களும் துணை போகிறார்களே என்று நினைக்கும்போது என் வயிறு பற்றியெரிகிறது. தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் அதில் இந்த மாத்திரைகளில் இருப்பதைவிட பல மடங்கு புரதம் கிடைக்கும். (10 -15 கிராம்). முட்டை சாப்பிடாதவர்கள் தினம் 50 கிராம் "சோயா மீல்மேக்கர்" எடுத்துக்கொண்டால் அதில் 15 -20 கிராம் புரதம் கிடைக்கும். அது எல்லாம் வேண்டாம், தினம் ஒரு 20 கிராம் (உள்ளங்கை அளவு) பொட்டுக்கடலையை எடுத்து சாப்பிட்டால் அதில் 10 கிராம் புரதம் கிடைத்துவிடும்.

ஜனங்கள் 500 மில்லி கிராம் என்றால் ஏதோ பெரிய அளவு என்று நினைக்கக் கூடும்.. சிறிது யோசித்தால் 500 மில்லி கிராம் என்பது 1/2 கிராம்தான் என்று  புரியும். அரை கிராம் தங்கம் வேண்டுமானால் 1500 ரூபாயாக இருக்கலாம். அரை கிராம் கடல் பாசிக்கு 5 ரூபாய் கொடுப்பது அநியாயத்திலும் அநியாயம்.