சுகஜீவனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுகஜீவனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 அக்டோபர், 2013

தமிழ்மணம் ரேங்க்கும் நானும்.


பள்ளியில் ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் கல்வித்தரத்தை ரேங்க் மூலமாகக் கணிக்கிறார்கள் அல்லவா? ஒருவன் ஒன்றாவது ரேங்க் வாங்கியிருந்தால் அவன் அந்த வகுப்பில் முதல் மாணவன் என்று சொல்கிறோம். அவனே ஒரு பாடத்தில் ஒரு மார்க் வாங்கியிருந்தால் என்ன சொல்வோம்? அவன் படிப்பில் மிகவும் பின் தங்கியவன் என்று தயங்காமல் சொல்வோம்.

இந்த எண் "1" என்பது என்ன பாவம் பண்ணியது? ஒரு சமயம் அதைப்போற்றுகிறோம், இன்னொரு சமயம் அதைத் தூற்றுகிறோம். இது எனக்குச் சரியாகப் படவில்லை. எப்போதும் நாம் ஒரே மாதிரியான கொள்கையை வைத்திருக்கவேண்டும் என்ற கொள்கையுடையவன் நான். அதாவது எதுவாக இருந்தலும் எண்ணிக்கை கூடினால் அது நல்ல விஷயம் என்று எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது என் கொள்கை.

ஒருவனிடம் இப்போது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருக்கின்றன. அடுத்த வருடம் அவனிடம் 200 கோடி ரூபாய் சொத்துக்கள் இருந்தால் என்ன சொல்வோம்? அவன் வளர்ச்சி நன்றாக இருக்கிறது என்று சொல்வோம் அல்லவா?

யாருக்காவது இந்த கொள்கையில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்கள். அடுத்த பதிவர் மகாநாட்டில் இதை ஒரு பட்டிமன்றமாக நடத்தி விடுவோம்.

நிற்க, இந்த டாபிக் எதனால் விவாதத்திற்கு வந்ததென்றால்,  தமிழ்மணம் திரட்டியில் என்னுடைய பதிவின் ரேங்க் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. ஒரு வருடத்திற்கு முன் 13 ஆக இருந்தது இன்று 35 ஐ எட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த அபரிமித வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என் சுகஜீவன வாழ்க்கை முறையே.

மிகவும் அத்தியாவசியமான காரியங்களை, அதாவது அந்தக் காரியத்தைச் செய்யாவிட்டால் உயிர் போய்விடும் அல்லது பார்யாள் பூரிக்கட்டையைக் கையிலெடுப்பாள் என்றால்தான் அந்தக் காரியத்தைச் செய்வேன். மற்ற நேரங்களில் இன்ன இன்ன காரியங்கள் செய்யவேண்டும் என்று பேப்பரில் லிஸ்ட் போட்டு டேபிளின் மேல் வைத்திருப்பேன்.

ஏதாவது ஒரு நாள் திடீரென்று வேகம் வரும். அப்போது அந்த லிஸ்டிலுள்ள வேலைகளை முடித்து விடுவேன். என்னுடைய இந்தக் கொள்கையின் பிரகாரம் ஒரு காலத்தில் பதிவுகள் நிறைய போட்டேன். அப்போது தமிழ்மணம் ரேங்க் 13 வரை சென்றது. இப்போது நான் என்னுடைய இயற்கைக் குணத்திற்கு வந்து விட்டபடியால் பதிவுகள் போடுவது வாரத்திற்கு ஒன்று என்றாகி விட்டது.

இப்போது தமிழ்மணம் ரேங்க் 34 ஆக இருக்கிறது. இது இன்னும் கூடுதல் ஆகலாம். ஆனால் இந்த ரேங்கினால் என்ன பயன் என்று யோசித்தால் ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது. அதனால் என் சுகஜீவன வாழ்க்கைச் சித்தாந்தத்தை கடைப்பிடிப்பதில் சங்கடம் ஒன்றுமில்லை.

கடைசியாக ஒரு வார்த்தை. இந்த சுகஜீவனம் என்றால் என்ன என்று சொல்லவேண்டுமல்லவா. எங்கள் ஊரில் கடன் வாங்கும்போது ஒரு பிராமிசரி பத்திரம் எழுதுவார்கள். அதில் கடன் வாங்குபவர் பெயர், அவருடைய தகப்பனார் பெயர், செய்யும் வேலை, குடியிருக்கும் விலாசம் எல்லாம் எழுதுவார்கள். ஒரு வேலையும் இல்லாமல் இருப்பவர்களுக்கு "சுகஜீவனம்" என்று எழுதுவார்கள். அதற்கு அர்த்தம் கொச்சைத்தமிழில் "தண்டச்சோற்று தடிராமன்" என்பதாகும். ஆங்கிலத்தில் RKD = Rice Killing Department என்றும் சொல்வார்கள்.