சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

பூக்களை விட ... அந்தப்பூக்காரி ... நல்ல அழகு !

                       

வைகோபாலகிருஷ்ணனின் சிறுகதைகளை சில நாட்களாக மறந்து விட்டேன். அவருடைய சிறுகதைப் போட்டியின் 16 வது கதை இது. இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.


கதையைப் படிக்கு முன் என் விமர்சனத்தைப் படித்து விட்டுச் செல்லவும்.  ஒரு வேண்டுகோள். கதையைப் படிக்குமுன் உங்கள் மனதைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவும்.

விமர்சனம்

VGK 16 - ஜா தி ப் பூ 

http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16.html

ஒரு சிறு சம்பவம் எப்படி ஒரு சிறுகதை ஆகிறது என்பதை இக்கதையில் காண்கிறோம். பாட்டியும் பேத்தியும் வியாபாரத்தில் போட்டி போடப் போக அது எவ்வாறு திருமணத்தில் முடிகிறது என்பதுதான் கதை.


கோதுமை அல்வா சாப்பிட்டால் அது எப்படி தொண்டையில் வழுக்கிக்கொண்டு ஓடுமோ அந்த மாதிரி கதை எவ்வித பிசிறும் இல்லாமல் பயணிக்கிறது. இம்மாதிரி கதைகளைப் படிக்கும் போது ஏற்படும் மனத்திருப்தி பெரிய திருப்பங்களுடன் எழுதப்படும் கதைகளைப் படிக்கும்போது ஏற்படுவதில்லை.

கதாசிரியருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

 பழனி.கந்தசாமி

திங்கள், 22 டிசம்பர், 2014

VGK 13 - வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி மு.பொ.போ.மு.க. உதயம் !!

இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.

இது ஒரு நெடுங்கதை. இதற்கு விமர்சனம் எழுதுவதானால் அது ஒரு நாவலில்தான் முடியும். ஆகவே சுருக்கமாக சொல்லுகிறேன்.

எந்த ஒரு ஆபீசிலும் இந்த மாதிரி ஸ்ரீனிவாசன்களைக் காணலாம். வெறும் சவடால் அடித்துக் கொண்டே காலத்தை ஓட்டுவார்கள். மற்றவர்களை குல்லாய் போட்டே தங்களை காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். இத்தகைய ஒரு நபரை கதாசிரியர் தான் வேலை செய்த ஆபீசில் பார்த்திருக்கவேண்டும்.

அதை அடிப்படையாக வைத்து இந்த நெடுங்கதையை பின்னியிருக்கிறார். நம் கதை நாயகருக்கு வாழ்க்கையில் இரண்டே இரண்டு நிலைகள்தான். ஒன்று வழுவட்டை நிலை, அடுத்தது எழுச்சி நிலை. இந்த இரண்டு வார்த்தைகளும் அவர் வாயில் இருந்து அனாயாசமாக வெளி வருகின்றன. சோர்விற்கு அவர் “வழுவட்டை” என்றும் சுறுசுறுப்பிற்கு “எழுச்சி” என்றும் கூறுகிறார் என்பது புலனாகிறது. இது ஏதாவது ஒரு ஊரின் வட்டார வழக்காக இருக்கலாம். கதையைப் படித்து முடிக்கு முன் நாமும் இந்த இரண்டு வார்த்தைகளுக்கு மிகவும் பரிச்சயமாகி விடுகிறோம்.

அவர் குடும்ப வாழ்க்கையைப் பற்றி கூறும் தத்துவங்கள் ஒவ்வொரு பிரம்மச்சாரியும் அறிந்து கொள்ள வேண்டியவை. இதை அவர் நம் இளம் கதாநாயகனுக்கு போதிக்கும் முறை இருக்கிறதே, அது 60 வயதில்தான் வரும். அவருடைய துபாய் டூரைப்பற்றிய விவரங்கள் ஒரு தனி பாணி.

எல்லாவற்றிலும் இசையில் சுருதி போல ஆதாரமாக ஓடுவது பொடி உபயோகம்தான். அதன் மேல் உள்ள ஈர்ப்பு, மற்ற எல்லா ஆசைகளையும் புறந்தள்ளி விடுகிறது. பொடி போடும் உத்தி எத்தனை வகைப்படும் என்று அவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். பொடி போடுபவர்கள் செய்யும் அட்டூழியங்களையும் அப்படியே புட்டுப் புட்டு வைத்திருக்கிறார் ஆசிரியர். நேரடி அனுபவம் இல்லாமல் இப்படி விவரிப்பது சாத்தியமில்லை.

அவர் ரிடையர் ஆகுமுன் அனைவருக்கும் பொடி டின் பரிசளிப்பது அவருடைய பொடி மோகத்திற்கு ஒரு முத்தாய்ப்பு.

ஆசிரியருக்குப் பாராட்டுகள்.