உணவு முறைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உணவு முறைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 நவம்பர், 2017

24 மூட நம்பிக்கைகள் - சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது.

                                         Image result for drinking water

சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக்கூடாது.

இது யார் வைத்த சட்டம் என்று நான் ஒரு ஆராய்ச்சியே செய்தேன். ஆனால் என்னால் இதற்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை. யாரோ சொன்னதாக வைத்துக்கொள்வோம். ஆனால் பலர் இதை நம்புகிறார்களே என்பதுதான் பரிதாபத்திற்குரிய விஷயம்.

அவர்கள் சொல்லும் முக்கியமான வாதம் என்னவென்றால் செரிமானத்திற்கு உதவும் என்சைம்கள் நீர்த்துப்போகுமாம். என்சைம்கள் என்றால் என்னவென்ற அறிவு இல்லாதவர்கள்தான் இவ்வாறு சொல்வார்கள். என்சைம்கள் அடர்வாக இருந்தாலும் நீர்த்துப்போனாலும் அதன் வேலையை எந்த சுணக்கமுமில்லாமல் செய்யும். இன்னும் சொல்லப்போனால் தண்ணீர் அதிகம் இருக்கும் உணவை இன்னும் சீக்கிரமாக செருக்க உதவும்.

இரண்டாவது இதனால் வயிற்றில் அசிடிடி அதாவது அமிலத்தன்மை அதிகரிக்குமாம். இதைப்போன்ற அறிவீனம் வேறொன்றுமில்லை. அமிலம் தண்ணீரினால் நீர்த்துத்தான் போகும். அது எப்படி அசிடிடியை உண்டாக்கும்?

இரைப்பையில் சேரும் உணவை இரைப்பை தன் அசைவுகளினால் அரைக்கிறது. போதுமான அளவு தண்ணீர் இல்லாவிட்டால் இரைப்பை கெட்டியாக இருக்கும் உணவை அரைக்க முடியாமல் திணறும்.

மேலும் செரிமானமான உணவை குடல் உறிஞ்சுவதற்கு அந்த உணவு நீர்த்ததாக இருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் செரித்த உணவில் உள்ள உப்புகள் அதிகமாக உறிஞ்சப்பட்டு சிறுநீரகக்கற்கள் உற்பத்தி ஆகும். 

இந்தக்காரணங்களினால் சாப்பிடும்போது அளவாகத் தண்ணீர் அருந்தலாம். சாப்பிட்டபிறகு தேவையான தண்ணீரை கண்டிப்பாக அருந்தவேண்டும். மூடநம்பிக்கைகளை களைந்தெறியுங்கள். ஆரோக்கியமாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

தவறினால் விக்கல் வந்து செத்துப்போவீர்கள்.

வெள்ளி, 2 டிசம்பர், 2016

ஒரு காரசாரமான பதிவு

                                 
                                     Image result for மிளகாய்ஊறுகாய்

மனிதன் சாப்பிடுவது ருசிக்காகத்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள். அப்படி ஒப்புக்கொள்ளாதவர்கள் தயவு செய்து வேறு பதிவிற்குச் சென்று விடுங்கள். உங்கள் நேரத்தை இங்கு விரயப்படுத்த வேண்டாம். ATM க்யூவில் நின்றாலாவது இரண்டாயிரம் ரூபாய் செலவிற்குக் கிடைக்கும்.

ருசியை அறிவது நாக்கில் உள்ள ருசி அறியும் திசுக்களே. இவை 60 வயதாகும்போது பாதிக்கு மேல் செயலிழந்து போகின்றன என்று மருத்துவம் படிக்கும் என் பேரன் சொல்கிறான். அது உண்மைதான் என்று என் மனைவியும் சொல்கிறாள். அவள் எதை வைத்து அப்படி சொல்கிறாளென்றால், நான் தினமும் சாப்பிடும்போது சாப்பாட்டில் ருசியே இல்லை என்று சொல்வதை வைத்து அப்படி சொல்கிறாள்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் கடைக்குப் போனபோது "மிளகாய் ஊறுகாய்" என்ற ஒன்றைப் பார்த்தேன். ஒரு பாக்கெட் வாங்கி வந்தேன். பிரித்து ஒரு பாட்டிலில் போட்டு, சாப்பிடும்போது தயிர் சாப்பாட்டுக்கு அதை வைத்து சாப்பிட ஆரம்பித்தேன். தொட்டு வாயில் வைத்தவுடன், ஆஹா, அந்த அனுபவத்தை எப்படிச் சொல்வேன்?

உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் அப்படியே ஒரு சிலிர்ப்பு. அடுத்த வினாடியே ஒரு கவளம் தயிர் சாதம், எப்படி எடுத்தேன், எப்போது வாயில் போட்டேன், எப்படி விழுங்கினேன் என்பது ஒன்றும் நினைவில் இல்லை. இப்படியாக ஒரு அரை ஸ்பூன் ஊறுகாயில் தயிர் சாதம் முழுவதும் மறைந்தது.

ஆஹா, இந்த ஊறுகாய்தான் நமக்கு உகந்தது என்று முடிவு செய்து, இன்னும் இரண்டு பாக்கெட் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று அடுத்த நாள் அந்தக் கடைக்குப் போனால், சார், அந்த ஊறுகாய் நேற்றே தீர்ந்து விட்டது, ஆர்டர் போட்டிருக்கிறோம், வந்து விடும். அடிக்கடி வந்து பார்த்து விட்டுப் போங்கள், என்றார்கள். வியாபார தந்திரம் எப்படி, பாருங்கள்.

பின்பு பல முறை போய்ப்பார்த்தும் அந்த ஊறுகாய் வரவேயில்லை. முதலில் வாங்கினது தீர்ந்து விட்டது. அந்த ஊறுகாய் இல்லாமல் தயிர் சாதம் உள்ளே போகமாட்டேனென்கிறது. என்ன பண்ணலாம் என்று யோசித்தேன்.

அப்போதுதான் ஒரு யோசனை வந்தது. நாம் படித்த படிப்பென்ன, லேசான படிப்பா, வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தும் சொல்லிக்கொடுத்திருக்கிறார்களே, இந்த மிளகாய் ஊறுகாய் என்ன, ஆர்ய வித்தையா? என்று முடிவு செய்து செயலில் இறங்கினேன். என்ன செய்தேன் என்று அடுத்த பதிவில் பாருங்கள்.

வியாழன், 21 ஜூலை, 2016

நம் உணவு முறையை மாற்றவேண்டும்.


                             Image result for south indian food on banana leaf

இது நவீன உலகம். கற்காலத்திலிருந்து எவ்வளவோ கணக்கிலடங்காத முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.  மனிதன் தன்னுடைய சௌகரியத்திற்காக பல விதமான உபகரணங்கள் கண்டு பிடித்து உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறான். கற்காலத்தில் மனிதன் இயற்கையாக இருந்த மலைக் குகைகளில் வாழ்ந்தான். வெய்யில், மழை,  காற்று ஆகிய இயற்கை உத்பாதங்களுக்கு உட்பட்டு இருந்தான்.

இப்போது அவன் வசிக்கும் வசிப்பிடங்களைப் பாருங்கள். இயற்கை சலனங்கள் அவனை எவ்வகையிலும் பாதிக்காத மாதிரி தன் வசிப்பிடங்களை அமைத்திருக்கிறான். அவன் நினைத்த சீதோஷ்ண நிலையை ஒரு கையசைவில் கொண்டு வர அவனால் முடியும்.

முன்பு அவன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் போக அவனுடைய கால்களை மட்டுமே நம்பி இருந்தான். இப்போது எத்தனைவிதமான வாகனங்கள் வந்து விட்டன. அவற்றை உபயோகப் படுத்தி நாம் நம் வாழ்க்கையை எளிமைப் படுத்திக்கொண்டிருக்கிறோம் அல்லவா?

அது போல நம் உணவு முறையிலும் பல மாற்றங்கள் தேவை. இப்போது நம் தமிழ்நாட்டில் உள்ள சாதாரண குடும்பங்களை எடுத்துக்கொள்வோம். அதிலுள்ள பெண்கள் காலையிலிருந்து இரவு படுக்கப்போகும் வரையிலும் சமையலறையிலேயே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். காலையில் பெட் காப்பியிலிருந்து ஆரம்பித்து இரவு படுக்கப்போகும் முன் குடிக்கும் பால் வரை எத்தனை விதமான உணவுகளைத் தயார் செய்கிறார்கள்?

இந்த அதீத வேலை அவசியமா?  தமிழர்களே, யோசியுங்கள். உதாரணத்திற்கு தமிழனின் ஸ்பெஷல் என்று சொல்லப்படும் இட்லியை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு தேவைப்படும் உழைப்பை சிறிது யோசித்துப் பாருங்கள். நல்ல அரிசியையும் நல்ல உளுந்தையும் சரியான விகிதத்தில் எடுத்து, தனித்தனியாக ஊறப்போட வேண்டும். பிறகு அவைகளை நன்றாக களைந்து சரியான அளவு தண்ணீர் விட்டு ஆட்டுக்கல்லில் ஆட்டவேண்டும். பிறகு இரண்டு மாவுகளையும் ஒரு பாத்திரத்தில் போட்டு சரியான அளவு உப்பு போட்டு கலக்கி வைக்கவேண்டும்.

இதை மாலை நேரத்தில் செய்யவேண்டும். இரவு முழுவதும் இந்தக் கலவையை பத்திரமாக வைத்திருந்தால் மறு நாள் காலை இந்த மாவு புளித்து பொங்கி வந்திருக்கும். இந்த புளிக்கும் விஷயம் இருக்கிறதே, இதைப் பற்றியே பல முனைவர் பட்டம் வாங்கும் அளவிற்கு ஆராய்ச்சி செய்யலாம்.

இதில் கைவாகு என்று ஒன்று இருக்கிறது. சிலர் கலக்கி வைத்தால்தான் இந்த மாவு நன்றாகப் புளிக்கும். இதை ஒருவருடைய கைவாகு என்று சொல்லுவார்கள். நன்றாகப் புளித்தால்தான் இட்டிலி மல்லிகைப் பூ மாதிரி வரும். சிலருடைய கைவாகுக்கு மாவு சரியாகப் புளிக்காது. அப்போது இட்லி பச்சை வாடை அடிக்கும். இட்லி சாப்பிட்ட திருப்தி வராது.

பிறகு இட்லிக்குத் தொட்டுக்கொள்ள சட்னி, மிளகாய்ப் பொடி + நல்லெண்ணை, சாம்பார், தொக்கு, இத்தியாதிகள். ஒவ்வொன்றிலும் டஜன் கணக்கில் வேறுபாடுகள்.

சட்னியில் தேங்காய்ச் சட்னி, வெங்காயச் சட்னி, மிளகாய்ச்சட்னி, பருப்புச் சட்னி, இப்படிப் பல வகைகள்.

பொடி வகைகளில் எத்தனை வகை? சொல்லி முடியாது. அதே போல் சாம்பார்கள். வெங்காய சாம்பாருக்கும் இட்லிக்கும் உள்ள பொருத்தம் வேறு எதற்கும் கிடையாது. என்ன இருந்தாலும் எங்க ஊர் அன்னபூர்ணா ஹோட்டல் சாம்பார் போல் எங்கும் இல்லை என்று நான் சொல்லுவேன். அந்தந்த ஊர்க்காரர்கள் தங்கள் தங்கள் அபிமான ஹோட்டல்களின் சாம்பார்தான் உயர்ந்தது என்று சொல்லிக்கொள்வார்கள்.

அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இட்லியும் கோழிக் குருமாவும் சாப்பிட்டால் தேவாம்ருதம் சாப்பிட்ட மாதிரி.

பாருங்கள், தமிழ் நாட்டின் ஒரு உணவிற்கே இத்தனை கதை இருக்கிறது. எல்லா உணவு வகைகளையும் பற்றி சொல்வதென்றால் சுமார் ஆயிரம் பதிவுகள் போட வேண்டு வரும்.

இன்று வாலிப வயதில் இருக்கும் நவ நாகரிக யுவதிகள் சமையல் கட்டையே பார்த்திராதவர்கள். அவர்களைப் போய் எனக்கு மல்லிகைப்பூ இட்லி சுட்டுக்கொடு என்று அவள் புருஷன் கேட்டால் அவள் என்ன சொல்வாள். ஒரு கிலோ மல்லிகைப்பூ வாங்கி வாருங்கள் என்பாள்.

ஆணைப் போல் பெண்ணும் இன்று பொருள் ஈட்டுகிறாள். ஆணும் பெண்ணும் சமம் என்று மேடைதோறும் முழங்குகிறோம். அப்படியானால் அவள் இன்னும் சமையலைக் கட்டிக்கொண்டு கஷ்டப்படவேண்டும்? இந்த பிரச்சினைக்கு இன்றைய இளைய தலைமுறையினர்தான் தீர்வு சொல்லவேண்டும்.

அமெரிக்கர்களும் அங்கு இருக்கும் இந்தியர்களும்  (இருவரும் வேலைக்குப் போகும் குடும்பங்களில்)  நான் அறிந்தவரையில் இப்போது சொல்லும் உணவு முறையை அனுசரிக்கிறார்கள்.

காலை உணவு:

முதலில்  ஒரு  பெரிய டம்ளர் பழரசம். இவைகள் ரெடியாகக் கிடைக்கின்றன. விலையும் மலிவு. பிறகு நான்கு ஸ்லைஸ் ரொட்டி. ரோஸ்ட் பண்ண ரோஸ்டர்கள் உண்டு.  ரொட்டியில் ஜாம் வெண்ணை, அசைவ உணவுகள் எதை வேண்டுமானாலும் வைத்து விழுங்கவேண்டியதுதான். பிறகு ஒரு டம்ளர் பால் அல்லது காப்பி.

காலை 11 மணிக்கு ஆபீசில் காப்பி ரூமில் காப்பி, பிஸ்கட். செலவை ஆபீசில் உள்ளவர்கள் பங்கிட்டுக் கொள்வார்கள்.

மதியம். ஆபீஸ் கேன்டீனில் ஒரு சேண்ட்விச் + ஒரு கோக்கோ கோலா

மாலை 4 மணி காப்பி, பிஸ்கட்

இரவு உணவு:

இதைத்தான் தயார் செய்ய கொஞ்சம் வேலை செய்ய வேண்டும். இந்தியர்கள் சப்பாத்தி அல்லது தோசை. அமெரிக்கர்கள் ஒரு அசைவ உணவு. கூடவே பல ரெடிமேட் சமாச்சாரங்கள்.

இந்த உணவு முறையில் நேரம் மிச்சமாவதோடு வேலையும் குறைவு.

நாமும் இந்த முறையை கடைப் பிடிக்கலாம்.  கணிணித் துறையில் இருப்பவர்கள் ஏற்கெனவே இந்த முறையை பின் பற்ற ஆரம்பித்திருக்கலாம்.

வியாழன், 8 நவம்பர், 2012

நாம் சாப்பிடும் உணவில் என்னென்ன இருக்கிறது?


தமிழ் நாட்டில் நாம் சாப்பிடுவது பெரும்பாலும் அரிசி, பருப்பு, எண்ணை மற்றும் காய்கறிகள் கலந்த உணவுகள்தான். இவைகளைப் பலவிதங்களில் சாப்பிடுகிறோம். இந்த உணவுகள் நம் இரைப்பையில் ஜீரணமாகி நம் உடலில் எவ்வாறு சேர்கின்றன, அவைகளின் வேலை என்ன என்பதைத் தெரிந்து கொள்வது சில தவறான கருத்துகளை மாற்ற உதவும்.

அரிசி, பருப்பு, எண்ணை மற்றும் காய்கறிகள்

இவைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அரிசி: இதில் தானியவகை உணவுகள் அனைத்தும் அடங்கும். கோதுமை, அரிசி, ராகி, சோளம், கம்பு, மற்றும் இவைகளிலிருந்து தயார் செய்யப்படும் அனைத்து உணவு வகைகளையும் இந்த குரூப்பில் சேர்த்துக் கொள்ளவும்

இந்த வகை உணவுகளில் உள்ள பொருள் ஸ்டார்ச்சு என்று சொல்லப்படும் கார்போஹைட்ரேட். கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் என்ற மூன்று கனிமங்கள்தான் இவைகளில் இருப்பதால் “கார்போஹைட்ரேட்ஸ்” என்ற பெயர் வந்தது. இந்த வகை உணவுகள்தான் நாம் உயிர் வாழவும், வேலை செய்யவும் தேவையான சக்தியைக் கொடுக்கின்றன.

இந்த ஸ்டார்ச்சு சத்தானது மனிதர்களில் இரைப்பையில் ஜீரணமாகி குளுகோஸ் ஆக மாறுகிறது. இந்த குளுகோஸ் குடல்வால்களின் மூலமாக உறிஞ்சப்பட்டு இரத்தத்துடன் கலக்கிறது. இரத்த ஓட்டத்தின் மூலமாக குளுகோஸ் உடலின் எல்லா பாகங்களுக்கும் போகிறது. இந்த குளுகோஸ் உடலிலுள்ள செல்களின் உள்ளே சென்று ரசாயன மாற்றங்கள் அடைந்து சக்தியாக மாறுகிறது. உடல் அவயவங்கள் ஓய்வில்லாது இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த இயக்கத்திற்கு சக்தி அவசியம். அந்த சக்தி இவ்வாறுதான் கிடைக்கிறது.

இது தவிர, மனிதர்கள் வேலை செய்யும்போது அந்த உழைப்பிற்கும் சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தியும் இவ்வாறு செல்களில் குளுகோஸ் மாற்றம் அடைவதால்தான் கிடைக்கிறது. சாப்பிட்ட உணவு முழுவதும் ஜீரணமாகி இவ்வாறு சக்தியாக மாறி செலவான பிறகு உடலுக்கு சோர்வு உண்டாகிறது. அப்போது உடலுக்கு சற்று ஓய்வும் உணவும் தேவைப்படுகின்றது. உணவு உண்டவுடன் மறுபடியும் இந்த சுழற்சி மூலம் சக்தி கிடைக்கிறது.

இதுதான் அரிசி, மற்றும் அதுபோன்ற தானிய உணவுகளின் பயன். இந்த தானியங்களில் சிறிதளவு புரதச்சத்தும், எண்ணைச் சத்தும் இருக்கும். ஆனால் அவை உடலின் தேவைக்குப் போதாது. அந்தத் தேவையை ஈடுகட்ட பருப்பு வகை உணவுகளும் எண்ணை வகை உணவுகளும் தேவை.

பருப்பு: எல்லாவிதமான பருப்புகளும் இதில் அடங்கும். துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பீன்ஸ் கொட்டைகள், கொள்ளு, பாசிப்பயறு முதலான பருப்புகளை நாம் சாப்பிடுகிறோம். இந்த பருப்புகளில் 
உள்ள முக்கிய பொருள் புரதச்சத்து ஆகும். புரதத்தில் நைட்ரஜன் தனிமம் ஒன்று 
அதிகப்படியாக இருக்கும். இந்த நைட்ரஜன் எல்லா உயிர்களுக்கும் 
இன்றியமையாத ஒரு தனிமம் (Element). அனைத்து ஜீவராசிகளின் செல்களின் கருக்களும் புரொட்டீனால் (புரதம்) ஆனவை. புரொட்டீன் இல்லையென்றால் உயிர் இல்லை. அந்த அளவிற்கு இது முக்கியமானது. எல்லா பருப்புகளிலும் சுமார் 25 சதம் புரொட்டீன் இருக்கும்.

ஜீவராசிகளின் செல்களுக்கு ஒரு குணம் என்னவென்றால், அவை 14 முதல் 24 நாட்களுக்கு ஒரு முறை தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும். மனிதனும் இந்த தத்துவத்திற்கு விலக்கல்ல. ஆகவே நாம் ஒவ்வொருவரும் 24 நாட்களுக்கு ஒரு முறை புது அவதாரம் எடுக்கிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். இப்படி செல்கள் புதுப்பித்துக்கொள்ள புரொட்டீன் அவசியம் தேவைப்படுகின்றது. செல்களில் உள்ள பழைய புரொட்டீன் அழிக்கப்பட்டு யூரியாவாக மாறி சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.

இப்படி புது செல்கள் உருவாகத் தேவைப்படும் புரொட்டீன்கள், பருப்பு வகை உணவுகளிலிருந்து கிடைக்கிறது. உடம்பின் ஒரு கிலோ எடைக்கு அரை கிராம் புரொட்டீன் வேண்டும் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். அப்படியானால் 60 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 30 கிராம் புரொட்டீன் வேண்டும். பருப்பு மற்றும் மற்ற உணவுகளில் உள்ள புரொட்டீன் 40 முதல் 50 சதம்தான் உடலில் சேரும். ஆகவே இவ்வொரு மனிதனும் ஏறக்குறைய 60 கிராம் புரொட்டீன் இருக்கும் உணவுகளை ஒவ்வொரு நாளும் சாப்பிடவேண்டும்.

எண்ணை வகைகள்:   எண்ணை என்றாலே கொழுப்பு என்றுதான் எல்லோரும் நினைக்கின்றனர். அது ஓரளவிற்குத்தான் சரி. அதிக கொழுப்பு சாப்பிடுபவர்கள் உடலில் கொழுப்பு அதிகமாகச் சேரும் என்பது உண்மைதான். ஆனால் தினமும் உணவில் கொழுப்பு சத்து அளவாகச் சேரவேண்டும்.

இது இரண்டு விதத்தில் உடலுக்கு உதவுகிறது. ஒன்று நம் உடலிலுள்ள கொழுப்பை புதுப்பிக்கத் தேவைப்படுகிறது. இரண்டாவது உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கிறது.

மாமிச உணவுகளில் (மீன் தவிர) பொதுவாக கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறது. அசைவம் அதிகமாக சாப்பிடுபவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். தாவர எண்ணை வகைகளில் எல்லா வகை எண்ணைகளையும் நம் முன்னோர்கள் உபயாகித்து வந்திருக்கிறார்கள். அவைகளை நாமும் உபயோகிக்கலாம். தவறு எதுவுமில்லை. ஆனால் அளவாக உபயோகிக்கவேண்டும். விளம்பரங்களில் பயங்காட்டுவது போல பயப்பட வேண்டியது அவசியம் இல்லை.

காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள்.
இவைகள் மனித உடலுக்கு வேண்டிய தாதுக்களையும், நார்ச்சத்தையும் கொடுக்கின்றன. தாதுக்கள் மனித உடம்பிற்கு வேண்டிய வைட்டமின்கள், என்சைம்கள், ஹார்மோன்கள் ஆகியவைகளை உற்பத்தி செய்வதற்கு அவசியமாகிறது. நார்ச்சத்து மலச்சிக்கல் வராமல் பாதுகாக்கும்.

எந்த வகை உணவையும் தனியாக சாப்பிட்டு வந்தால் நாளடைவில் உடல் க்ஷீணிக்கும். ஆகவே எல்லா வகை உணவுகளையும் கலந்து சரியான விகிதத்தில் சாப்பிட்டு வரவேண்டும். இதைத் தான் சரி விகித உணவு என்று சொல்கிறார்கள். மனிதன் ஆரோக்கியமான வாழ்வு வாழ சரி விகித உணவு அவசியம்.