அவலங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவலங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 டிசம்பர், 2017

33. தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது.

                                            Image result for மாடு பிடித்தல்

ஆனாலும் சும்மா சொல்லப்படாது. நம் இந்தியர்கள் வாய்ச்சொல்லில் அசகாய சூரர்கள். தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதில் கை தேர்ந்தவர்கள்.

நான் அப்போதே சொன்னேன். ஆனா காசை வாங்கிட்டு இந்த அதிகாரிகள்தான் அனுமதி அளித்தார்கள் என்று எப்போதும் எதிர்க் கட்சிக்காரன் சொல்லிக்கிட்டுத் தான் இருப்பான்.

ஆனா இவனும் அந்தக் காசில் பங்கு வாங்கிக்கொண்டு வாயையும் **ச்சையும் மூடிக்கொள்வான்.

எப்படியோ இந்திய ஜனத்தொகையில் 14 பேரை சில நொடிகளில் குறைத்தாய் விட்டது.

என்ன பரிதாபம் என்றால் இதுவும் சில நாட்களில் மறந்து போகும். கும்பகோணம் பால் மணம் மாறாத சிறார்களின் மறைவை விடவா இது கொடியது?

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

சொந்த வீடு வைத்திருப்பதின் கஷ்டங்கள்.

                               
"கட்டினவனுக்கு ஒரு வீடு, கட்டாதவனுக்கு ஊரெல்லாம் வீடு"



இந்தப் பழமொழியைக் கேட்டிராதவர்கள் அபூர்வம். எப்பவோ வாங்கின சைட்டில் வீடுகட்ட கடன் வாங்கி, ஊரெல்லாம் அலைந்து ஒரு கொத்தனாரைப் பிடித்து, அவருக்கு வேண்டிய பொருள்களை எல்லாம் வாங்கிக் கொடுத்து, அவர் வேலை செய்யும்போதெல்லாம் பக்கத்தில் நின்று ஒரு வீடு கட்டினவனுக்குத்தான் அதிலுள்ள சிரமங்கள் தெரியும். 

வீடு கட்டி முடித்து அந்த வீட்டிற்கு "புது மனைபுகு விழா" நடத்தி குடி வந்த பிறகுதான் ஒருவனுக்கு சோதனைகள் ஆரம்பமாகின்றன. 

வீட்டை முழுவதும் முடித்தபின் "புது மனைபுகு விழா" நடத்துவது சம்பிரதாயமில்லை. ஆகவே "புது மனைபுகு விழா" முடிந்த பின் வீட்டு வேலைகள் பல பாக்கி இருக்கும். வீட்டை இது நாள்வரை கட்டின கட்டிட கான்ட்ராக்டர் "புது மனைபுகு விழா" விற்கு வந்து அவருக்குண்டான வெகுமதிகளை வாங்கிப்போன பின் கண்ணிலேயே தென்படமாட்டார். பேசின தொகைக்கு மேல் 
அவர்  வாங்கியிருப்பார். அதனால் இனி இந்த வீட்டுக்கு வேலை செய்தால் காசு வராது என்று அவருக்குத் தெரியும்.  

இந்த நுணுக்கம் வீடு கட்டுகிறவனுக்கு எப்போதும் புரிவதில்லை. பட்டுக் கெட்டபின்தான் ஞானம் வரும்.  அந்த கான்ட்டிராக்டரை இனி எப்போதும் பிடிக்க முடியாது என்பதுவும் அப்போதுதான் புரியும். அவருடைய செல்போனும் எப்போதும் அணைக்கப்பட்டிருக்கும். 

அந்த வேலைகளை முடிக்காமல் குடி போவதும் சாத்தியமில்லை. இந்த வீட்டுக் கான்ட்டிராக்டர்கள் ஒரு எழுதாத சட்டம் வைத்திருக்கிறார்கள். அதாவது ஒரு கான்ட்ராக்டர் கட்டின கட்டிடத்திற்கு வேறு எந்தக் கான்ட்ராக்டரும் வரமாட்டான். வீட்டுக்காரன் நிலை திரிசங்கு சொர்க்கம்தான்.

எப்படியோ தெரிந்தவர்களைப் பிடித்து ஒரு கொத்தனார் ஏற்பாடு பண்ணி பாக்கி வேலைகளை முடிப்பதற்குள் ஏகப்பட்ட அலைச்சலும் பணமும் செலவாகி இருக்கும். எப்படியோ வீட்டு வேலைகளை முடித்து வீட்டிற்கு குடி வந்தாயிற்று. இனிமேல்தான் சோதனைகள் அடுக்கடுக்காக காத்திருக்கின்றன என்கிற விபரம் ஒவ்வொன்றாகப் புரியும்.

குழந்தைகளைப்  பக்கத்தில் இருக்கும் நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும். இதற்கு அந்த பள்ளிக்கூட நிர்வாகிகள் கேட்கும் நன்கொடைக்கு இன்னும் ஒரு வீடே கட்டி விடலாம். எப்படியோ, யார் யார் காலிலோ விழுந்து கொஞ்சம் சலீசான நன்கொடையில் இடம் வாங்கியாயிற்று. அவர்களைப் பள்ளிக்கூடத்திற்கு கூட்டிக்கொண்டுபோய் திரும்பக்கூட்டிவர ஆட்டோ அல்லது வேன் ஏற்பாடு பண்ணவேண்டும். புது காலனி ஆகையால் அவன் ரொம்பவுமே பிகு பண்ணுவான். சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். 

இதற்கு அப்புறம் தான் ஆபீஸ் போய்வர ஏற்பாடு செய்யவேண்டும். இது அவர் உத்தியோகம் பார்க்கும் இடத்தைப் பொறுத்தது. பஸ் வசதி பக்கத்தில் இருந்தால் அவர் பிழைத்தார். அந்த பஸ் நிலையத்திற்கும் சைக்கிள் (சைக்கிள் யார் இப்போது வைத்திருக்கிறார்கள்?) மொபட் அல்லது  ஸ்கூட்டரில் போய் அங்குள்ள ஸ்டேண்டில் வைத்து விட்டு பஸ் பிடிக்கவேண்டும். பின்பு மாலை திரும்பி வரும்போது வீட்டிற்கு வேண்டிய காய்கறி மற்ற சாமான்களை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேரவேண்டும்.

வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக குடும்பத்தினர், அதாவது மனைவி மக்கள் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். மற்ற பொருட்கள் போனால் திரும்ப சம்பாதித்துக் கொள்ளலாம்.

வீட்டிற்கு தண்ணீர் கனெக்ஷன் மற்றும் மின் இணைப்பு முதலிலேயே வாங்கியிருப்பீர்கள். ஆனால் அவை கட்டிடம் கட்டும்போது வாங்கினதாகையால் அவைகளின் உபயோகக் கட்டணம் வணிக ரீதியில் இருக்கும். அதை குடியிருப்பு ரீதிக்கு மாற்றவேண்டும். அதற்குண்டான ஆபீசைக் கண்டு பிடித்து, அதற்குண்டான ஆளைக் கண்டுபிடித்து, அவருக்குண்டான மாமூலைக் கொடுத்தால் காரியம் கச்சிதமாக முடியும். இல்லாவிட்டால் லோ லோவென்று நாய் படாத பாடாக அலைய விட்டு விடுவார்கள்.

அடுத்தது ரேஷன் கார்டை புது விலாசத்திற்கு மாற்றுவது. இதை நீங்களே செய்ய ஆசைப்பட்டு முயற்சித்தீர்களானால் ஆறு மாதத்திற்கு நீங்கள் ஆபீசுக்கு லீவு போட வேண்டி வரும். அதற்குண்டான சரியான ஆள் யாரென்று உங்கள் ஆபீஸ் பியூன் தெரிந்து வைத்திருப்பான். அவனிடம் விஷயத்தை ஒப்படைத்தீர்களானால் ஒரு மாதத்தில் காரியம் முடிந்து விடும். என்ன, பணம் சில ஆயிரம் செலவு ஆகும். பணம் கிடக்கிறது, விடுங்கள், இன்று போனால் நாளை வந்து விட்டுப் போகிறது. காரியம் ஆயிற்று பாருங்கள். அதுதானே நமக்கு வேண்டியது.

ஓரளவு அரசு சடங்குகளை முடித்தாயிற்று. இனி வரும் சோதனைகள்தான் முக்கியமானவை. தண்ணீர் பைப் ஆங்காங்கே லீக் ஆகும். அதற்கு பிளம்பரைக் கண்டுபிடிப்பது கடவுளைக் கண்டு பிடிப்பது போல்தான். அதே போல் எலெக்ரிசிடியும் அவ்வப்போது தொந்திரவு கொடுக்கும். இதையெல்லாமாவத் எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் இந்த மழைக் காலம் வருகிறதே அதை சமாளிக்கத்தான் பெரிய சாகசங்கள் புரிய வேண்டி இருக்கும்.

இத்துடன் போதும் என்று நினைக்கிறேன். இனி யாரும் சொந்த வீட்டிற்கு ஆசைப்பட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். 


புதன், 22 ஜூன், 2016

ஒரு பரோபகாரியின் கதை

                                         Image result for இரு நண்பர்கள்
ஒரு ஊரில் இரு நண்பர்கள். ஆரம்பப் பள்ளியிலிருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். இருவருக்ம்கு பட்டப்படிப்பு முடிந்தவுடன் சென்னையில் வேலை கிடைத்தது. சில வருடங்கள் கழித்து இருவருக்கும் மணமானது. இரு குடும்பமும் அன்னியோன்னியமாக இருந்தன.

இந்நிலையில் ஒருவன் வீடு வாங்க ஆசைப்பட்டான். அந்த ஏரியாவில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு இருவாகிக்கொண்டு இருந்தது. அதில் இவன் ஒரு அபார்ட்மென்ட் பதிவு செய்தான். கையிலுருந்த சேமிப்பு பணத்தையெல்லாம் கொடுத்து விட்டு பிறகு பேங்க் லோன் அப்ளை பண்ணினான்.

பேங்க்கில் ஒருவர் கேரண்டி போடவேண்டும் என்றார்கள்.
நமது கதாநாயகன் தன் நண்பனைக் கேட்டான். அவன் அதற்கென்ன, கையெழுத்துதானே, போட்டால் போயிற்று என்று பேங்கிற்குப் போய் கையெழுத்து போட்டான்.

அபார்ச்மென்ட் கட்டிடம் வளர்ந்தது. மொத்தம் பதிமூன்று மாடிகள். ஒரு நாள் பெரிய புயல் காற்று, இடியுடன் மழை வந்தது. அந்தக் கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. அபார்ட்மென்ட் புக் பண்ணினவன் இதைக்கேட்டதும் மாரடைப்பில் இறந்து விட்டான்.

இப்போது அந்த பேங்க் கடனுக்கு யார் பொறுப்பு?

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க

இந்தப் பழமொழியை அநேகமாக எல்லோரும் அறிந்திருக்கலாம்.

அறிந்திருக்கவில்லை என்றால் இப்போது அறிந்து கொள்ளவும்.

சிறுவயது முதலே எனக்கு ஊர் சுற்றிப் பார்ப்பது மிகவும் விருப்பமான சமாச்சாரம். ஆனா அப்போவெல்லாம் ஊர் சுற்றுவதற்கு வேண்டிய காசு இல்லை, இப்போ காசு இருக்கிறது ஆனால் சுதந்திரம் இல்லை.

அதற்கு முன் இந்தப் பாட்டை ஒரு முறை பாடிப் பார்த்துக்கொள்ளவும்.



நல்ல ஓட்டலுக்குப் போய் எல்லாவற்றையும் ஒரு பிடி பிடிக்கவேண்டும் என்ற ஆசை ஒரு காலத்தில் இருந்தது. அன்றைக்கு கல்லைத் தின்றாலும் செரிக்கக் கூடிய தெம்பு இருந்தது. குறிப்பா பல்லு நல்லா இருந்தது. என்ன இருந்து என்ன பிரயோஜனம்? அன்றைக்கு கையில காசு இல்லை.

இன்னைக்கு காசு இருக்குது, பல்லு இல்லே, பசி இல்லே. ரெண்டு தோசை முருகலாச் சாப்பிட்டா நடு ராத்தியில நெஞ்சு கரிக்குது. எழுந்திரிச்சி அரை ஸ்பூன் பெருங்காயத்தை வாயில் போட்டு ஒரு டம்ளர் வெந்நீர் குடிச்சாத்தான் சரியாகுது.

இந்த லட்சணத்தில ஊர் சுத்திப் பாக்கணும்னு ஆசை. இரண்டு நாளைக்கு முன்னால தெரிஞ்ச டிராவல்ஸ்காரன் போன் பண்ணி, துபாய் போறேன்னு சொன்னீங்களே, வாரீகளா என்று கேட்டான். எப்பவோ சொல்லி வச்சது. இப்ப போன் பண்ணறான். இதைக் காதில் கேட்ட என் சகதர்மிணி என்ன போன் என்றாள்.

நான் இந்த டிராவல்ஸ்காரன் துபாய் வர்றியான்னு கேக்கறான், ரெண்டு பேரும் போகலாமா என்றேன். நான் வரலை என்றாள். அப்ப நான் மட்டும் போய்ட்டு வரட்டுமான்னு கேட்டேன். நான் வராத இடத்திற்கு நீங்களும் போக க்கூடாது அப்படீன்னுட்டாள்.

இந்த மாதிரி அக்கிரமம் உலகத்தில் உண்டா?  இங்கிலீசுல ஒரு பழமொழி சொல்லுவாங்க.  Dog in the manger policy அப்படீன்னு. நாய் போயி மாட்டுக்காடில உக்காந்துட்டு தானும் வைக்கோல சாப்பிடாம மாட்டையிம் வைக்கோல சாப்பிட உடாம வம்பு பண்ணுமாம். அந்த மாதிரி ஆயிப்போச்சுங்க என் கதை.

புதன், 14 டிசம்பர், 2011

தொழிற்சாலைகளும் விவசாயமும்



இந்தியாவை வல்லரசாக்கும் முயற்சியில் தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் அரசு மறைமுகமாக விவசாயத்தை நசுக்குகிறது என்கிற உண்மை பலருக்குத் தெரியாது. தொழிற்சாலைகளுக்கு நிலம் சலுகை விலையில் தரப்படுகிறது. கட்டிடங்கள் கட்டுவதற்கும், இயந்திரங்கள் வாங்குவதற்கும் சலுகை வட்டியில் கடன்கள் கொடுக்கப்படுகின்றன. தொழிற்சாலை ஆரம்பித்து பல வருடங்களுக்கு வரிச்சலுகைகள் கொடுக்கப் படுகின்றன.

இவற்றையெல்லாம் அனுபவிப்பவர்கள் யாரென்று பார்த்தால் ஏற்கனவே தொழில்துறையில் ஏகபோக உரிமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் பணமுதலைகளும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் அரசியல்வாதிகளும்தான். இத்தகைய முதலாளிகளில் பெரும்பான்மை ஆசாமிகளின் வழிமுறை என்னவென்றால் – பேங்குகளில் ஏகப்பட்ட கடன் வாங்கி தொழிற்சாலை ஆரம்பிக்கவேண்டியது. ஆரம்பித்திலிருந்தே பொய்க் கணக்குகள் எழுதி பெரும்பகுதி பணத்தை ஸ்வாஹா செய்து ஸ்விஸ் வங்கிகளில் போட்டுவிடுவது. சில வருடங்கள் கழித்து நஷ்டம் என்று சொல்லி தொழிற்சாலையை மூடிவிடுவது.

இந்த தொழிற்சாலைகள் தங்கள் தொழிலாளிகளுக்கு கொடுக்கும் சலுகைகளினாலும் மற்ற ஆசை வார்த்தைகளினாலும் மக்கள் விவசாய வேலைக்குப் போகாமல் இந்த தொழிற்சாலைகளுக்கு சென்று விடுகிறார்கள். இவர்களுடன் இந்த விவசாயிகள் போட்டிபோட முடியாமல் நிலத்தை விற்றுவிடுகிறார்கள் அல்லது கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்த கொள்கை நீடிக்குமானால் இந்தியா எதிர்காலத்தில் கல்லையும் மண்ணையும் சாப்பிட்டுத்தான் வாழ வேண்டியிருக்கும்.